மேலூரில் 600 க்கும் மேற்பட்ட பதுக்கப்பட்ட ரேஷன் அரிசி மூடைகளை சிவில் சப்ளை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலூர் அழகர்கோவில் ரோட்டில் பல்வராயன்பட்டியில் ஒரு கிடங்கில் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக சிவில் சப்ளை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சிவில் சப்ளை எஸ்.பி., இளங்கோ, டி.எஸ்.பி., சிவசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் தனிப்படை சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று மாலை சுற்றி வளைத்தது.
வெளி நபர்கள் கவனிக்க முடியாத அளவில் அங்கு ஒரு கிட்டங்கி அமைக்கப்பட்டிருந்தது. அதில் ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்தவர்கள் தப்பி சென்றுவிட்டனர். அந்த இடம் சேக் மீரான் என்பவருக்கு சொந்தமானது. இவருக்கு லாரி மற்றும் வேன் ஆபீஸ் மேலூரில் உள்ளது. சேக் மீரான் தலை மறைவாகிவிட்டார்.
எஸ்.பி., இளங்கோ கூறியதாவது: வெளி மாநிலங்களுக்கு கடத்துவதற்காக இவை வைக்கப்பட்டுள்ளன. சேக் மீரான் பிடிபட்டதும் முழு விபரமும் தெரிய வரும் என்றார். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி (டி.என். 69 பி 6042) பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட 600 க்கும் மேற்பட்ட அரிசி மூடைகளை அதிகாரிகள் மதுரைக்கு கொண்டு சென்றனர்.


