மதுரையை ஓராண்டிற்குள் பசுமையாக்க, ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் துவக்க விழா, மாரியம்மன் தெப்பக்குளம் மேற்கு கரையில் நேற்று நடந்தது.விவசாயம், வனத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் நடந்த விழாவிற்கு, மரம் வளர்ப்பு குழுத் தலைவர் கணேசன் வரவேற்றார். மகிழம் மரக்கன்றை நட்டு, திட்டத்தை மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, மனைவி காந்தி துவக்கி வைத்தனர்.மு.க.அழகிரி பேசியதாவது :தேர்தல் அறிக்கையில், "பல திட்டங் களை மதுரை மக்களுக்கு வழங்குவேன், உருவாக்குவேன்' என, குறிப்பிட்டிருந்தேன்.
அதில் ஒன்று, மரக்கன்று நடும் விழா. "ஒரு லட்சம் மரக்கன்றுகளை நகரில் அமைத்து தருவேன்' என்றேன். முதற்கட்டமாக, தெப்பக்குளத்தைச் சுற்றி, 200 மரக்கன்றுகள் நடப்பட்டுள் ளன. மற்ற இடங்களில் நடும் மரக்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பை கட்சியினர், தன்னார்வ மற்றும் சமூக அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக் கொள்வர். பல திட்டங்களை தேர்தலுக்கு முன் கூறியிருந்தேன். அதில், சிலவற்றை நிறைவேற்றிவிட்டேன் என நினைக்கும் போது, உள்ளம் மகிழ்கிறது. இதற்கு முன் எம்.பி.,யாக இருந்தவர்கள், "மதுரையை இப்படியாக்குவேன், அப்படியாக்குவேன். சிங்கப்பூராக்குவேன்' என்றனர். நான், 'பசுமையாக இருந்தாலே போதும்" என்கிறேன். "கிரீன் சிட்டி'யாக இருக்க, பல திட்டங்களை தீட்டி வருகிறேன். நகரில், 18 நவீன இலவச கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. பொங்கல் பண்டிகைக்குப் பின் சில கழிப்பறைகளும், மற்றவை எனது பிறந்தநாளுக்கு பிறகும் திறக்கப்படும், என்றார்.பின், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு 14 வகையான மரக்கன்றுகளை இலவசமாக வழங்கினார். விழாவில், அமைச்சர் தமிழரசி, எம்.எல்.ஏ.,க்கள் மூர்த்தி, ராஜேந்திரன், கவுஸ்பாட்ஷா, கலெக்டர் மதிவாணன், மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டின், தி.மு.க., நகர் செயலாளர் தளபதி பங்கேற்றனர்.
மரக்கன்றுகளை யாரிடம் வாங்குவது? : இத்திட்டத்திற்காக, "மதுரை மரம் வளர்ப்புக்குழு" அமைக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மதுரை அழகர்கோவில் மெயின் ரோடு, தாமரைத் தொட்டி அருகில் உள்ள, 1, இண்டிகோ என்க்ளேவ் என்ற முகவரியில் இயங்கும் இக்குழுவிடம் விண்ணப்பித்து, மரக்கன்றுகளை பெறலாம். மேலும் விபரங்களை அறிய, குழுச் செயலாளர் ஜெகதீசனை 94428 82288ல் தொடர்பு கொள்ளலாம்.


