கொட்டாம்பட்டியை சேர்ந்தவர் வினோத். இவர் தென்மண்டல ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் படிப்பை முடித்து விட்டு வேலையின்றி இருந்தேன். எனது ஊரை சேர்ந்த மோகன்ராஜ் என்னையும், எனது நண்பர்கள் செந்தில்குமார், பொன்னையன், மாடசாமி, பொன்னுசாமி, மந்தக்காளை, செந்தில் மற்றொரு செந்தில் ஆகியோரிடம் சிவகங்கை மாவட்டம் ஏரியூரை சேர்ந்த தினேஷ்குமார், அவரது மனைவி சுமதி ஆகியோர் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறினர்.
இதனை நம்பிய நாங்கள் 8 பேரும் அவர்களை சந்தித்து பேசினோம். பாஸ்போர்ட்டையும் கொடுத்தோம். சில வாரம் கழித்து எங்களுக்கு போன் செய்து உங்கள் அனைவருக்கும் விசா வந்து விட்டது. தலா ரூ.1.40 லட்சம் கட்டுங்கள் என்றனர். இதனை நம்பிய நாங்கள் கடந்த மாதம் 19-ந்தேதி தினேஷ்குமார், சுமதி தம்பதியிடம் மொத்தம் ரூ.12 லட்சத்து 10 ஆயிரம் கொடுத்தோம்.
இதையடுத்து கடந்த 3-ந்தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்றோம். அங்கு நாங்கள் எடுத்து சென்ற விசா உள்ளிட்ட ஆவணங்கள் போலியானவை என்று கூறி சிறையில் அடைத்து விட்டனர். பின்னர் 2 நாட்கள் கழித்து அரசு செலவில் ஊருக்கு வந்து சேர்ந்தோம்.
எனவே ஏஜென்டுகளாக செயல்பட்டு எங்களை மோசடி செய்த தினேஷ் குமார், அவரது மனைவி சுமதி, இப்ஸ்ட்சன், மோகன் ராஜ், லோகேஷ் ஆகிய 5 பேர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புகாரை உட னடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
Melur-News

